தேசிய விருது பெற்ற சந்தோசத்தில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அந்தப் படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினிமுருகன் மற்றும் ரெமோ படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன.
Related image

இதற்கு அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்த எந்தப் படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதிலும் தளபதி விஜய் உடன் நடித்த பைரவா படமும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. கீர்த்தி சுரேஷ் ஓய்வில் இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அந்தப் படங்களில் அவர் உடல் மெலிந்து ஒல்லி பெல்லியாகவே காணப்பட்டார். இது பற்றி விசாரித்தபோது உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சியும் மசாஜும் செய்து கொள்வதாகக் கூறிவந்தார்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் மகாநடி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் எதிர்பார்த்தது போலவே, தற்போது அறிமுக இயக்குநரின் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.




பெண்ணை மையமாகக் கொண்ட இத்திரைக்கதையை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரின் கீழ் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்றுவருவதாகவும், அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: