செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரித்துள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

விழாவில் தயாரிப்பாளர் பேசியதாவது,

 

 "இயக்குநர் கதை சொன்னதும் படம் பண்ண ஹீரோவிடம் டேட் கேட்டோம். அவரும் உடனே டேட் கொடுத்தார். அடுத்து இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி  படம் எடுப்பது என்று யோசித்தேன். ஆனால் இயக்குநர் "சார் எடுத்துவிடலாம் சார்" என்று நம்பிக்கையாகச் சொன்னார். இந்தப்படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் மற்ற அனைத்து  நடிகர்களும் யோசிக்காமல் டேட் கொடுத்தார்கள். இப்படத்தில் ஒத்துழைத்து கொடுத்து நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கு என் நன்றி" என்றார்

 

நடிகர் விஜயகுமார் பேசியதாவது,

 

"ராஜ வம்சம்..இந்தப்படம் ஒரு ராஜவம்சம். சசிகுமார் சிறந்த நடிகர் சிறந்த பண்பாளர், சிறந்த தம்பி. அவரைப்போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை. நிக்கி கல்ராணி நல்ல நடிகை. சிறப்பா நடிச்சிருக்காங்க. இத்தனை கலைஞர்களை வைத்து வேலை வாங்கும் திறமை கதிர்வேலு அவர்களுக்கு இருக்கிறது. இந்தப்படம் பெரிய குடும்பப் படம். தமிழ்நாட்டில் எல்லாக் குடும்பங்களும் பார்க்க கூடியப்படமாக இருக்கும். இந்தப்படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்" என்றார்

 

ஆர்.கே செல்வமணி பேசியதாவது,

 

"இந்தப்படத்தின் இயக்குநர் கதிர்வேலுக்கு என் பெரிய வாழ்த்துகள். ஏன்னா இவ்வளவு நடிகர்ளை ஒன்றாக வைத்து என்னால் ஒரு போட்டோ கூட எடுக்க முடியாது. கதிர்வேலு நல்ல திறமையாளர். ஒரு படத்தில் ஹீரோ அஸ்ஜெஸ்ட் பண்ணிப் போகலன்னா படமே எடுக்க முடியாது. அதற்கு சசிகுமாருக்கு நன்றி. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக இங்கு வந்து நல்ல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார் அவருக்கும் நன்றி. இங்கு இந்தத் தயாரிப்பாளரை நான் இப்போது தான் பார்த்தேன் என்று விஜயகுமார் சார் சொன்னார். அந்த வகையில் இயக்குநர் கதிர்வேலு கொடுத்து வைத்தவர். இந்தப்படம் செண்டிமெண்டாக நிச்சயம் ஓடும் என்று தோன்றுகிறது.

 

திட்டமிட்டு படத்தை முடித்திருக்கிறார் கதிர். இவ்வளவு பிரம்மாண்டமான படத்தை 50 நாளில் முடித்துள்ளது பெரிய விசயம். படப்பிடிப்பில் உயிரிழப்புகளை இனி தவிர்க்க வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார்

 

நடிகர் ராதாரவி பேசியது ,

 

"விழாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் என் வணக்கம். ராதாரவி பேசினால் சர்ச்சை என்கிறார்கள். என் பேச்சு புரியாதவர்களுக்குத் தான் சர்ச்சை. இந்தச் சகோதரர் கதிர்வேலு ரொம்பப் போராடி  வந்திருக்கிறார். தயாரிப்பாளரை நான் இன்று தான் பார்க்கிறேன். சசிகுமார் தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர். ரொம்ப தங்கமான பிள்ளை. இப்ப நிறைய நடிகர்கள் பாடிகாடோடு வருகிறார்கள். சசிகுமார் ரொம்ப எளிமையாக இருக்கிறார். கேமராமேன் எங்களை போகஸ் பண்ணவே இல்லை. கேமராவுக்கு முன் யார் வருகிறார்களோ அவர்களை எடுத்துக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் சந்தோஷமாக நடித்தேன்.

 

சசிகுமாருக்கு இது செகண்ட் லைப் என்றார்கள். அவருக்கு இப்போது இருப்பதே நயிஷ் லைப் தான். நிக்கி கல்ராணி நல்லா நடிச்சிருக்கு. அவருக்கு எல்லாக் கேரக்டருக்கும் பொருத்தமான நடிகை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்றார்கள். அது நல்ல விசயம். நானும் இந்தி கற்றிருந்தால் இன்னைக்கு அங்கே எனக்குப் பெரிய இடம் கிடைத்திருக்கும். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பாருங்கள்" என்றார்

మరింత సమాచారం తెలుసుకోండి: