ஐதராபாத்:
மழை... மழை... கனமழை... தத்தளிக்கும் தண்ணீரில் தெலுங்கானா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்ற செய்தி... முரண்பாடாக இருக்கே என்று நினைக்காதீர்கள்... விஷயத்தை பாருங்க...


கடந்த ஒரு வாரமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பட்டையை கிளப்பி, மக்களின் வயிற்றில் கிலியை ஏற்படுத்தி கொட்டு கொட்டு என்று மழை பின்னி பெடல் எடுத்து வருகிறது. இதனால் இரண்டு மாநிலமும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. 


அதேசமயம் தெலுங்கானாவில் நிலவி வந்த கடும் வறட்சி  போயே போச்சு... அணைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் இன்னும் 2 வருடத்துக்கு விவசாயிகள் நிம்மதியாக இருக்கலாம்.


அத்தனை துயரமும் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். இந்த மழை விவசாயிகளை பிழைக்க வைத்து விட்டது என்றே சொல்லலாம். 


அதனால்தான் தண்ணீரில் தத்தளித்தாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மறுபக்கம் இந்த மழை பெரும் சேதத்தை ஆந்திராவை ரணகளப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம். ஐதராபாத் நகரம் மிதந்து கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 


ஆயிரக்கணக்கான கிராமத்தினர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மணியாறு அணை நிரம்பி வழிகிறது. மணியாறு அணை இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் அணை நிரம்பி வழிகிறது. இதை வேடிக்கை பார்க்க பெரும் கூட்டம் கூடி வருகிறது. 


இந்த பெரு மழையால் தெலுங்கானாவை கடந்த 4 வருடமாக ஆட்டி வந்த வறட்சி ஓடி ஒளிந்து விட்டது. கோதாவரி ஆறும் பொங்கிப் பெருகி வெள்ளப் பெருக்கெடுத்துக் காணப்படுகிறது. அதன் துணை நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


அதேசமயம் தொடர் மழையால் பல மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் நீங்கவில்லை. ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



మరింత సమాచారం తెలుసుకోండి: