டமாஸ்கஸ்:
போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் நடந்த குண்டு மழையில் 100 பேர் பலியாகினர்.


சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சுமார் 2.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.


உள்நாட்டு போர் நடைபெறும் வேளையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அங்கு தாக்குதல் நடத்தி பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.


அவர்களுக்கு எதிராக சிரியா அரசு படையுடன் இணைந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து களம் இறங்கி உள்ளது. இந்த நிலையில் சிரியாவில் 10 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் செய்ய அமெரிக்காவும், ரஷியாவும் தீர்மானித்தன. 


இறுதியில் நாளை (12ம் தேதி) பக்ரீத் பண்டிகையில் இருந்து 10 நாட்கள் போர் நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடந்துக் கொண்டு இருக்கும் போதே சிரியா ராணுவம் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் நகரில் அதிக அளவில் மக்கள் கூடும் மார்க்கெட் பகுதியில் குண்டு வீசியது.


இதில் 60 பேர் பலியாகினர். 90 பேர் காயம் அடைந்தனர். இதேபோல் அலெப்போ அருகே அன்தான் மற்றும் ரெய்யான் பகுதியில் நடத்திய குண்டு வீச்சில் 40 பேர் பலியாகினர். இப்படி போர்நிறுத்த ஒப்பந்தத்தின் போதே குண்டு வீச்சு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: