கடலூர்:
கொடுமையிலும் கொடுமையாக கழிவறையில் வைத்து சிறுவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்ப... விசாரணையின் போது மோப்ப நாய் சிறுவனின் தந்தையை கவ்வியதால் மேலும் சலசலப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த சித்தேரியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் நிதிஷ். இவன் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தான்.
வழக்கம்போல பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சிறுவனை காணவில்லை. இதனால் பதறிப்போன அவனது பெற்றோர் பல இடங்களில் சிறுவனை தேடினர். இந்நிலையில் வீட்டின் கழிவறையில் நிதிஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இது அக்கம்பக்கத்தினரை பெரும் அதிர்ச்சியில் தள்ளியது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மோப்ப நாய் சிறுவனின் தந்தை முருகேசனை சுற்றி வந்து கவ்வி பிடித்தது. இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. முருகேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள... தனது மகன் உயிரிழந்த நிலையில் இருக்கும் போது தூக்கினேன் என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.