புதுடில்லி:
தூங்காதீங்க முதல்வரே என்று சொல்லவா முடியும்... சமூக இணையதளத்தில் இப்போது வறுப்படுகிறார் இவர்.


யார் என்று கேட்கிறீர்களா? வேறு யாரு... பரபரப்பை கழுத்தில் கட்டிக்கொண்டு அலையும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.


டில்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தினவிழாவில் கெஜ்ரிவால் தூங்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டில்லி செங்கோட்டையில் இந்திய சுதந்திரதின விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். விழாவில் மத்திய அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


இதில் கலந்து கொண்ட டில்லி முதல்வர் கெஜ்ரிவால் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அருகே அமர்ந்திருந்தார். பிரதமர் பேசிக்கொண்டிருந்த போது கெஜ்ரிவால் தூங்கி விட்டார். இந்த காட்சிகள் டிவிக்களில் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவ துவங்கின.


அப்புறம் என்ன வேக வைச்ச கடலையையே வறுத்து எடுக்கும் நம்ப நெட்டிசன்கள்... காய்ந்த கடலை கிடைத்தால் விடுவார்களா? கெஜ்ரிவாலை கிண்டல் என்று கொப்பரையில் போட்டு வறுக்க ஆரம்பித்து விட்டனர். 


செங்கோட்டையில் தாம் உரையாற்றுவதாக கெஜ்ரிவால் கற்பனை செய்து பார்த்து கொண்டுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்ய, டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, கெஜ்ரிவால் தூங்கியதை சமாளிக்கும் வகையில், பிரதமரின் உரை சுவாரஸ்யமாக இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அட போங்கப்பா... உங்க போங்கு ஆட்டத்தை நிறுத்துங்கப்பா...


మరింత సమాచారం తెలుసుకోండి: