நம்மவர்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்தவுடன் வரும் பேலன்ஸ் ரசீதை அங்கேயே கசக்கி எறிந்து விட்டு வருவது வழக்கமான ஒன்று. இனிமேல் அதுபோல் செய்யாதீர்கள்.


ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரசீதை வைத்து ஒரு பெரிய தில்லாலங்கடி வேலை செய்த வாலிபர் ஆன்லைன் மூலம் ரூ.48 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மோசடி வாலிபர் இப்போது கம்பி எண்ணி வருகிறார்.


 சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரத்து 781 எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அடப்பாவிங்களா? நான் எப்போ இவ்வளவு பணம் எடுத்தேன் என்று அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச் சென்று நின்றார் வங்கி அதிகாரிகளிடம். அங்கு அவர்கள் சொன்னது அவருக்கு மயக்கத்தையே வரவழைத்து விட்டது. 


ஆன்லைனில் பொருள் வாங்கி இருக்கீங்க... அதான் பணம் பிடிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல... இல்ல... இல்ல... அது நான் இல்லவே இல்லை என்று ராஜன் அடம் பிடிக்க அப்போதுதான் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது அதிகாரிகளுக்கு. 


 இதுகுறித்து போலீசில் ராஜன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டபோதுதான் ஒரு தில்லாலங்கடி வாலிபர் செய்த மோசடி தெரிய வந்தது. கடந்த மாதம் ஓமலூர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் ராஜன் பணம் எடுத்து விட்டு, ரசீதை அங்கே போட்டு சென்றுள்ளார்.


அதை அவருக்கு பின்னால் நின்ற ஒருவர் எடுப்பது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் அங்கு பணத்தை எடுத்துள்ளார்.


இதையடுத்து காவல் துறையினர் அந்த நபர் பயன்படுத்திய ஏ.டி.எம். கார்ட்டை கண்டறிந்து அதன் மூலம் பெயர் முகவரியை கண்டுபிடித்தனர்.


அவர் கோவிலூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி (30) என்பதும், ரசீதில் இருக்கும் நம்பர்களை தனது நண்பரான மதுரையை சேர்ந்த ஆசாமி ஒருவருக்கு தெரிவித்தும், அதை வைத்து ஆன்லைனில் பொருட்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அப்புறம் என்ன இப்போ "மாமியார்" வீட்டுக்கு பெரியசாமியை "கவனித்து" அனுப்பி வைத்தனர் போலீசார்.


Find out more: