சேத்துப்பட்டு:
சென்னை, சேத்துப்பட்டு பகுதியில் தொழிலதிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர், கோவிந்தாச்சாரி (70) தொழிலதிபர். இவர் தன் மனைவி மீராவுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகன் வீட்டிற்கு கடந்த மாதம் சென்றனர்.


இந்நிலையில் இவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்ப உள்ளததால் பணியாளர்கள் நேற்று மதியம் வீட்டை சுத்தம் செய்ய கதவை திறந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.


வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை தெரிய வந்தது. உடன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேத்துப்பட்டு போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் வந்து ஆய்வு செய்தனர்.


தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிந்தாச்சாரி வீடு திரும்பியதும்தான் கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.


Find out more: